இன்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரைச் சந்தித்தனர். அதன்போது அவர்களிடம் மகஜரையும், கோரிக்கைகளையும் சமர்ப்பித்த சங்கத்தினர் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்தனர். அப்போது, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் தங்களுக்குத் திருப்தி இல்லை என்றும்…..அவர்களால் பேசமுடியுமே தவிர சரியான தீர்வைத் தரும் அதிகாரமோ, வல்லமையோ அவர்களிடம் இல்லையெனக் கூறியதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இது சர்வதேச அவதானம், மேற்பார்வை, தலையீடு, விசாரணை என கோரப்படுவதன் மீது ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் வைத்திருந்த நம்பிக்கைகள் மேல் விழுந்த பேரிடி! ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கூறியவை சரிதான். அவர்களுக்குரிய அதிகார வரம்புகள் விசாலமானவையல்ல. அதனைத் தாண்டி வெற்றி, தோல்வி என்பன எப்போதும் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளுக்குள் மட்டுமே….நடுவர்களுக்கோ, மேற்பார்வையாளர்களுக்கோ அந்த முடிவுகள் எந்தத் தாக்கத்தையும் கொடுக்கப் போவதில்லை.
நோர்வே அதில் பிரதான உதாரணமாகக் காலங்கடந்து நிற்கின்றது! இந்தப் பிரச்சினைகள் இத்தோடு முடியப்போவதில்லை. சரியோ, பிழையோ, விதிமுறைகள் நீதியானவையோ, அநீதியானவையோ, இருதரப்புக்கள் மட்டுமே கடைசிவரை ஆடிமுடிக்க வேண்டும். நடுவர்களையோ, ஏனையோரையோ தமக்காக ஆடும்படி கேட்கவும் முடியாது. அவர்கள் ஆடவும் மாட்டார்கள்.
இந்த உண்மையைத்தான் இன்றைய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணியில் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அதைப் போராட்டம் செய்த உறவுகள் சங்கத்தினரின் வார்த்தைகள் ஊடாகவே மக்களுக்கு வெளிப்படுத்தச் செய்திருப்பது மிகச்சிறந்த திட்டமிடல். இதனை மக்கள் விளங்கித் தமக்குள் உள்வாங்கித் தமக்குத் தேவையான தீர்வைத் தாமே பெற்றுக் கொள்ள முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும்.

