தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் தொடர்ந்து சூடுபிடித்துள்ள ஒரு கருத்து. ஈழத் தமிழினத்தின் அரசியல் பரப்பில் 17 வருடங்களாக உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடந்த மௌனயுத்தம் இன்று பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது. 2009ல் தலைவரின் மரணத்தை பொய் என்று சொல்லிய கூட்டம் இப்போது அதனையே உண்மை என்று சொல்கிறது.
அன்று உண்மையை சொல்லியவர் துரோகியாக்கப்பட்டது மட்டுமல்ல எதிரியிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதியாக்கப்பட்டார். அன்று தொடர்ந்து பணம் வசூலிக்க தலைவர இருக்கிறார் என்ற பொய் தேவைப்பட்டது. இன்று அதே பொய்யை இன்னொரு கூட்டம் சொல்லி வசூலிப்பில் இறங்கியுள்ளனர். அவர்களை எதிர்ப்பதற்காகவே தலைவர் இல்லை என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
பொய்மைக் கூட்டம் இப்போது தலைவர் வருவார் என மதவாதிகள் போல் கோஷம் போடுகிறது. வயது முதிர்ந்த காலத்திலும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்கள் விழித்திருந்து பகல்க்கனவு காணுவது வியப்பானதே.
“”ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் என்னவோ அதிலிருந்துதான் தலைவர்களும், சமூகப் பிரதிநிதிகளும் தோன்றுவார்கள்””.
தலைவர் இருக்கிறார் என்ற செய்தி அறிவியலுக்கும் கற்பனவாதத்துக்கும் பொய்மைக்கும் இடையிலான யுத்தமாகும். இந்த யுத்தத்தில் தமிழ் தேசிய இனம் இருபத்தோராம் நூற்றாண்டுக்கு உரியதான வகையில் அறிவுபூர்வமாக தன்னை தகவமைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பொய்மைகளையும், கற்பனைகளையும், விருப்புவாதங்களையும் கடந்து யதார்த்தம் என்னவோ, நடைமுறை என்னவோ அதற்கு ஏற்ற வகையில் உலகளாவிய அரசியல் போக்கிற்கு இசைவாக்கி அறிவு சார்ந்து மூலோபாயத்தை வகுத்து பயணிப்பதுதான் தமிழ் மக்களின் இன்றைய கடமையாகும்.இல்லையெனில் வழமை போல வரலாறு உங்களை காறி உமிழும்!

