கனடாவில் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 2026 ஆகஸ்ட் 1 முதல் புதிய கிராஃபிக் எச்சரிக்கை படங்கள் சிகரெட் பொதிகளில் கட்டாயம் இடம்பெற உள்ளன. புகைப்பழக்கம் 29%லிருந்து 13%க்கு குறைந்துள்ள நிலையில், 2035க்குள் 5%க்கு கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
13 புதிய அதிர்ச்சி படங்கள் – வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர், இருதய அறுவை சிகிச்சைக்குப் பின் நிலை, இரண்டாம் நிலை புகையால் குழந்தைகள் பாதிப்பு, பெருங்குடல் புற்றுநோய், இரத்தம் கலந்த சிறுநீர் போன்றவை – பொதிகளின் முன் மற்றும் பின்புறம் 75 சதவீதம் பரப்பளவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் இடம்பெறும்.
சிகரெட்டுகளின் மீதும் “புகையிலை புகை நச்சுத்தன்மை வாய்ந்தது”, “சிகரெட் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்”, “சிகரெட் கல்லீரலை சேதப்படுத்தும்” உள்ளிட்ட ஆறு செய்திகள் அச்சிடப்படும். கனடிய புற்றுநோய் சங்கம் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளது. இது உலக அளவில் முன்னோடியான முயற்சியாகக் கருதப்படுகிறது.
