பாரிஸ் அருகே உள்ள சென்-சென்ட்-டெனிஸ் மாவட்டத்தின் லா கோர்னவ் (La Courneuve) நகரில் உள்ள ‘Quatre-Routes’ பகுதியில், Paul-Vaillant-Couturier வர்த்தகத் தெருவில் கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் சுகாதாரத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுமார் 30 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில், சுகாதார விதிகளை மீறியதற்காக 17 கடைகள் நிர்வாக உத்தரவின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டன. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரே தெருவில் இத்தனை கடைகள் மூடப்பட்டது அசாதாரணமானது என்று நகரத்தின் புதிய நகரமுதல்வர் அலி டியுவாரா (Aly Diouara) குற்றம் சாட்டியுள்ளார். இது அரசியல் சதி என்றும் அவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சென்-சென்ட்-டெனிஸ் மாகாண ஆளுநர் ஜூலியன் சார்லஸ் (Julien Charles), “இந்தச் சோதனைகள் மற்றும் மூடல் நடவடிக்கைகளுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன். நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறோம். எந்தவொரு குறிப்பிட்ட நகரத்தையும் வேண்டுமென்றே குறிவைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 1500க்கும் மேற்பட்ட சோதனைகள் நடாத்தப்பட்டு அவற்றில் 183 கடைகள் மூடப்பட்டதாகவும் அதில் 127 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டதாகவும் லா கூர்நெவ் பகுதியில் மூடப்பட்ட 17 கடைகளில் 15 கடைகள் குறைகளை சரி செய்து மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூடப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, முக்கியமாக பின்வரும் சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக கடைகள் மூடப்பட்டன:
- குளிர் சங்கிலி (Cold chain) சரியாகப் பராமரிக்கப்படாதது
- எலி, சுண்டெலி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தாதது
- பொதுவான சுகாதார மற்றும் தூய்மை குறைபாடுகள்
சில கடை உரிமையாளர்கள், சோதனை நடந்த நேரத்தில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக குளிர் சங்கிலியைப் பராமரிப்பது கடினமாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.குறித்த பகுதியில் ஈழத்தமிழர் மற்றும் தெற்காசிய இனத்தவர்கள் அதிகமான கடைகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
